Published : 09 May 2024 05:50 AM
Last Updated : 09 May 2024 05:50 AM

அமுல் பால் நிறுவனம் வந்தாலும் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அதிகாரிகள் உறுதி

சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபடுகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் வாயிலாக, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது.

அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம்முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை.

இந்நிலையில், இரண்டு மாதங்களில் சித்தூர் பால் பண்ணையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களில் பால் விற்பனையை தொடங்குவதற்கு அமுல் நிறுவனம் முடிவெடுத்து உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது.

இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த தகவல் உண்மையில்லை. ஏற்கெனவே, தமிழகத்தில் பால்கொள்முதல் ஈடுபடுவதை தவிர்க்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இதையடுத்து, பால் கொள்முதல் மேற்கொள்ளும் முயற்சியை தொடங்கவில்லை தற்போது, பால் விற்பனையை அமுல் நிறுவனம் தொடங்கவில்லை.

அப்படியே, பால் விற்பனையில் அமுல் நிறுவனம் வந்தாலும் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில், இந்திய அளவில் மிகக் குறைந்த விலையில் தரமான பால் விற்பனை செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, அமுல் நிறுவனம் வந்தாலும், ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x