Published : 08 May 2024 04:39 AM
Last Updated : 08 May 2024 04:39 AM

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவில் பிஏஎஸ்எஃப் நிறுவன பூச்சிக்கொல்லி மருந்து அறிமுகம்

ஹைதராபாத்தில் ‘எஃபிகான்’ பூச்சிக்கொல்லி மருந்தை பிஏஎஸ்எஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான வணிக இயக்குநர் கிரிதர் ரணுவா, ஆசிய பசிபிக் நாடுகளுக்கான மூத்த துணைத் தலைவர் சிமோன் பார்க், மூத்த துணைத் தலைவர் (விவசாயத் தீர்வுகள் - சர்வதேச சந்தை உத்திகள்) மார்கோ க்ரோஸ்டானோவிக் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

ஹைதராபாத்: விவசாயம், கட்டுமானம், ஆரோக்கியம், மின்னணுவியல், ஆட்டோமொபைல் என பல்வேறு துறைகளின் தேவைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை வழங்குகிறது பிஏஎஸ்எஃப் நிறுவனம். விதை உற்பத்தி, உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த நிறுவனம் தீர்வுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், பருத்தி மற்றும் காய்கறி சாகுபடியில் பயிர்களுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ‘எஃபிகான்’ என்ற புதிய பூச்சிக்கொல்லி மருந்தை இந்தியாவில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மருந்து, உலகின் 2-வது நாடாக இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிஏஎஸ்எஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான வணிக இயக்குநர் கிரிதர் ரணுவா, ஆசிய பசிபிக் நாடுகளுக்கான மூத்த துணைத் தலைவர் (விவசாயத் தீர்வுகள்) சிமோன் பார்க், நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விவசாயத் தீர்வுகள் - சர்வதேச சந்தை உத்திகள்) டாக்டர் மார்கோ க்ரோஸ்டானோவிக் ஆகியோர் இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்தனர்.

நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது: கிரிதர் ரணுவா: இந்திய விவசாயத் துறை தீர்வுகளுக்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. களைச் செடிகள், நோய்களாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் எங்கள் நிறுவனம் ஏற்கெனவே 6 பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பருத்தி பயிர், தக்காளி, வெள்ளரி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறி செடிகளில் சேதம் விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் வகையில் ‘எஃபிகான்’ என்ற புதிய பூச்சிக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்துள்ளோம். இது, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இலைப்பேன், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ போன்ற பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் வீரியம் நீண்ட காலம் இருக்கும் என்பதால், அடிக்கடி தெளிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

சிமோன் பார்க்: ஆசிய பசிபிக் நாடுகளில் மக்கள்தொகை, உணவுப் பொருள் தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், விவசாய நிலத்தின் பரப்பு,விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை போன்றவை குறைந்துகொண்டே வருகிறது. இதுதவிர, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புதிய பிரச்சினைகள் என பல்வேறு சவால்கள் உள்ளன.

இதை தொழில்நுட்பத்தின் உதவியோடு விவசாயிகள் எதிர்கொள்வதற்கான தீர்வுகளை எங்கள் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து இந்தியவிவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். பொதுவாக, பயிர்களின் தண்டுகளில் துளையிடுகிற, இலைகளில் சாறுகளை உறிஞ்சுகிற பூச்சி வகைகளை அழிப்பதுமிகவும் கடினம். அந்த வகை பூச்சிகளை பெருமளவு அழிக்கும்திறனை இந்த புதிய மருந்து பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x