ஊட்டி, கொடைக்கானல் செல்ல ‘இ-பாஸ்’ நடைமுறை அமல்

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ‘இ-பாஸ்’ நடைமுறை அமல்
Updated on
1 min read

குன்னூர்/ கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இ-பாஸ் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இது ஜூன் 30 வரை செயல்படுத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை, முதல் நாளான நேற்று, 518 தனியார் பேருந்துகள், 466 மினி பேருந்துகள், 15,787 கார்கள், 1,289 வேன்கள், 2,841 இருசக்கர வாகனங்கள், 545 வணிகம் தொடர்பான வாகனங்கள் என 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையான கல்லார் சோதனை சாவடி, தூரி பாலம் மற்றும் வனக்கல்லூரி அருகே இ-பாஸ் பரிசோதனை பணிகளை ஆட்சியர் மு.அருணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் அனுமதி குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவுவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. இருப்பினும், அந்த இடத்திலேயே இ-பாஸ் பதிவு செய்த பிறகே அந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் வழங்க சுங்கச்சாவடி அருகே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியில் இ-பாஸ் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆய்வு செய்தார். நேற்று 3,792 வாகனங்கள் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் வழங்கப்பட்ட நிலையில் 1,217 வாகனங்கள் மட்டுமே வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in