அரூர் பகுதியில் பலத்த காற்றுடன் இரண்டாவது நாளாக கனமழை - போக்குவரத்து பாதிப்பு

அரூரை அடுத்த கீரைப்பட்டி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் குலை தள்ளிய நிலையில் முறிந்து விழுந்த வாழை மரங்கள். படம்- எஸ். செந்தில்.
அரூரை அடுத்த கீரைப்பட்டி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் குலை தள்ளிய நிலையில் முறிந்து விழுந்த வாழை மரங்கள். படம்- எஸ். செந்தில்.
Updated on
1 min read

அரூர்: அரூர் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கீரைப்பட்டி, அச்சல் வாடி, குடுமியாம் பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர், கடத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கீரைப்பட்டி, கெலாப்பாறை, அச்சல் வாடி ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக் கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர்.

மேலும், கோபிநாதம்பட்டி அருகில் 4 மின்கம்பங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் முறிந்தன. இதனால் மின் விநியோகம் பாதிக்கப் பட்டது. அரூரில் இருந்து சித்தேரி செல்லும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் சம்பவ இடங்களுக்குச் சென்று சாலைகளில் மரங்களை அகற்றி சீர் செய்தனர்.

பொம்மிடி அடுத்த ரேகடஅள்ளி, ஓபிளிநாய்க்கன அள்ளி, கொக்கராப்பட்டி, தாதனூர், திப்பிரெட்டி அள்ளி, கந்தன் கவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் 13 வீடுகளின் சுவர் மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தன. சுரக்காய் பட்டியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. திப்பிரெட்டி அள்ளி, கொண்டகர அள்ளி, வத்தல் மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இடி மின்னல் தாக்குதல் அதிகமாக இருந்ததால் மாலை முதல் இரவு வரை பல்வேறுப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in