Published : 05 May 2024 05:38 AM
Last Updated : 05 May 2024 05:38 AM

ஓய்வூதியர்களின் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்: போக்குவரத்து செயலருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: போக்குவரத்து கழகங்களில் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், போக்குவரத்துறை கூடுதல் முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2022 நவம்பர் மாதத்துக்கு பிறகு ஓய்வு கால பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வு கால பணப்பலன்களை வழங்காததால் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களுடைய வருங்கால வைப்புநிதி ஓய்வுபெற்ற ஒரு மாத காலத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், பணிக்கொடையும் ஒய்வுபெற்ற 30 நாட்களுக்கு உள்ளேயும், விடுப்பு சம்பளம் ஓய்வு பெறும் போதும், ஓய்வுபெறும் தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதியத்தில் தொகுத்து பெறும் தொகையினை உடனடியாகவும் வழங்கிட வேண்டும் என சட்டப்படியான உரிமைகள் உள்ளன. அப்படி இருந்தும், போக்குவரத்து கழக நிர்வாகங்கள் சட்டத்துக்குப் புறம்பாக ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இருந்து வருகின்றன.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடைய பணப்பலன்களை நிர்வாகம் வழங்காததால் தங்களுடைய அடிப்படை அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தொழிலாளர்கள் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒய்வுபெற்ற தொழிலாளர்களில் பலர் எவ்வித ஓய்வு கால பலன்களையும் பெறாமல், இயற்கை எய்திய அவலமும் நடந்தேறியுள்ளது.

பிடித்தம் செய்யும் வருங்கால வைப்புநிதி பணம் உரிய கணக்கில் செலுத்தப்படாததும், பணிக்கொடை பணத்தையும் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் செலுத்தாததுமே தொழிலாளர்கள் ஓய்வுக்குப் பின் ஓய்வு கால பலன்களை பெறாமல் இருப்பதற்கு காரணம்.

எனவே, உடனடியாக ஓய்வு பெற்ற அனைத்துதொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பலன்களை வட்டியுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x