Published : 27 Aug 2014 12:06 PM
Last Updated : 27 Aug 2014 12:06 PM

3 ஆயிரம் பணிகளுக்கு விரைவில் குரூப் 4 தேர்வு: அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது

அரசு பணிக்கு குரூப்-4 தேர்வு மூலம் 3 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பி எஸ்சி) தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் சென்னை யில் செவ்வாய்க்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசின் நீதித்துறை பணியில் 162 சிவில் நீதிபதிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 21-ம் தேதி ஆகும். சிவில் நீதிபதி நியமன பணிகளை 4 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

3 ஆயிரம் ஊழியர் தேர்வு

உதவி கால்நடை மருத்துவர் பதவியில் 686 காலிப் பணியிடங் களுக்கு சிறப்பு தகுதித் தேர்வுக்கான அறிவிப்பும், 315 காலியிடங் களுக்கு நேரடி நியமனத்துக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

அதேபோல் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 3 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும். கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x