Published : 04 May 2024 08:25 AM
Last Updated : 04 May 2024 08:25 AM

உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம்: ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு

விருத்தாசலம்: சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த 7 மாத கர்ப்பிணி, எதிர்பாராத வகையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிழந்தார்.

சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரி (21). இவருக்கும், தென்காசி மாவட்டடம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சுரேஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதால், இருவரும் சென்னையிலேயே வசித்து வந்தனர். இந்நிலையில், கஸ்தூரி கர்ப்பமானார். அவருக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு விழா நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டனர்.

அந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்தபோது, கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. இதையடுத்து, ரயிலின் படிக்கட்டுப் பகுதியில் நின்று அவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது, பூ.மாம்பாக்கம் என்ற இடத்தில் கஸ்தூரி திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், ரயில் பெட்டியில் (எண். 7) உள்ள அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நிற்கவில்லை. அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலியை இழுத்தபோதும் ரயில் நிற்காமல் சென்ற நிலையில், பெட்டி எண் 10-ல் உள்ள அபாய சங்கிலியை இழுத்தபோது, சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள பூவனூர் அருகே ரயில் நின்றுள்ளது.

இதையடுத்து ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், நள்ளிரவு முழுவதும் ரயில் பாதையில் கஸ்தூரியை தேடியுள்ளனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பூ.மாம்பாக்கம் பகுதியில் கஸ்தூரியின் உடல் கண்டறியப்பட்டது. சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்த நிலையில், ரயிலை நிறுத்த முயற்சித்தும், அபாய சங்கிலிகள் வேலை செய்யவில்லை என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரயில்வே டிஎஸ்பி செந்தில்குமரன், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் கஸ்தூரியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதேபோல, விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமத்தும் விசாரணை நடத்தினார்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் ராம்குமார் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, கஸ்தூரியின் உடல் மற்றும் 7 மாத ஆண் சிசுவின் உடல் ஆகியவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x