Published : 04 May 2024 08:34 AM
Last Updated : 04 May 2024 08:34 AM

தீவட்டிப்பட்டியில் திருவிழா நடத்துவதில் மோதல்: இரு தரப்பை சேர்ந்த 31 பேர் கைது

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் மோதல் ஏற்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார்

சேலம்: சேலம் அருகே தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தீ வைப்பு, கல்வீச்சில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில்உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரைத் திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டும்நடத்தி வந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு மற்றொரு தரப்பினரும் திருவிழா நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.இதையொட்டி நடைபெற்றஅமைதிப் பேச்சுவார்த்தையின்போது இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும், கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதில், பழக்கடை, பேக்கரி, தேநீர் கடை என 5 கடைகள் எரிந்து சேதமாகின. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து எஸ்.பி. அருண்கபிலன் தலைமையிலான போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். பின்னர், 5 ஏடிஎஸ்பி-க்கள், 7 டிஎஸ்பி-க்கள் தலைமையில் 100 போலீஸார் தீவட்டிப்பட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அம்பேத்கர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

மோதலின்போது காயமடைந்த காவலர்கள் சதாசிவம், ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைக்கு தீ வைத்தது, கல் வீச்சில் ஈடுபட்டது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இரண்டாவது நாளாக நேற்றும் தீவட்டிப்பட்டியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x