Published : 04 May 2024 06:20 AM
Last Updated : 04 May 2024 06:20 AM

கோவை மாநகரின் பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தீர்வுக்கு மக்கள் கோரிக்கை

கோவை உப்பிலிபாளையத்தி்ல், சாலையோர பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை/பொள்ளாச்சி: கோவை மாநகரின் பல்வேறு இடங் களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுவதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள், வடவள்ளி-கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய வற்றின் மூலம் தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி, பில்லூர், அழியாறு அணைகளை மையப்படுத்தி மேற்கண்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த பருவ காலங்களில் சிறுவாணி, பில்லூர் அணை பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால், அணைகளில் நீர் இருப்பு சரிந்தது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மாநகர் முழுவதும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை. பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, ஆவாரம்பாளையம், ஹோப் காலேஜ், புலியகுளம், ராமநாதபுரம் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் சிலமணி நேரங்களே குடிநீர் விநியோகிக்கப்படுவதால், குடிப்பதற்கும், சமைப்பதற்கும் தேவையான அளவுக்கு நீர் கிடைப்பதில்லை.

எனவே, வேறு வழியின்றி மாநகராட்சியின் நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பொதுக் குழாய்கள், பல்வேறு இடங்களில் உள்ள சாலையோர பொதுக்குழாய்களில் வரும் குடிநீரை நீண்ட வரிசையில் காத்திருந்து பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.

மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும் இரண்டு அல்லது மூன்று குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. எனவே, நாங்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீர் விநியோகம் தாமதமாகும் பகுதிகளில், கூடுதல் எண்ணிக்கையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பில்லூர் அணையில் ஓரளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

1 மற்றும் 2-வது பில்லூர் திட்டங்களின் மூலம் 120 எம்.எல்.டி வரை குடிநீர் எடுத்து விநியோகிக்கிறோம். தட்டுப் பாட்டை தவிர்க்கவும், சீரான முறை யிலும் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேடான பகுதி களுக்கு மட்டுமின்றி, தேவையான இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணிகளை தீவிரப் படுத்தியுள்ளோம்’’ என்றனர்.

14 ஆழ்துளைக் கிணறுகள்: கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் கிராமப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:

கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தற்காலிகமாக 14 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளோம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி கிடைத்ததும் அந்தந்த கிராமப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, பொது மக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண் டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x