Published : 04 May 2024 05:30 AM
Last Updated : 04 May 2024 05:30 AM

கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை

கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் (93) மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில், சிறு கிராமத்தில் பிறந்தவர் ஐ.சண்முகநாதன். சிறுவயதிலேயே எழுத்தின் மீதான ஆர்வத்தால், பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். சிறுகதை, கட்டுரை, திரை விமர்சனம், துணுக்குகள் நிறைந்த வெண்ணிலா பல்சுவை இதழாக விளங்கியதுடன், நூலகத்துக்கு வருவோரின் பாராட்டையும் பெற்றது.

கடந்த 1953-ல் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்த சண்முகநாதன், 70 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூக நீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டார் சண்முகநாதன்.

அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது. ஒரு தமிழன் பார்வையில் 20-ம் நூற்றாண்டு, கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை என்பது உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு, ஜூன் மாதம், கலைஞர் எழுதுகோல் விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக நேற்று இவர் காலமானார்.

இவரது உடல், முகப்பேர் ஏரி திட்ட குடியிருப்பில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு வில்லிவாக்கம் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும்.

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மூத்த பத்திரிகையாளரும் 2021-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ.சண்முகநான் வயது மூப்பால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான அவரது மறைவு தமிழ் இதழியல் உலகுக்கு பெரும் இழப்பாகும் என்றார்.

சண்முகநாதன் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x