Published : 04 May 2024 06:20 AM
Last Updated : 04 May 2024 06:20 AM

சிறுமியின் ஒட்டிய விரல்கள் சீரமைப்பு - தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின் மூலம் சிறுமியின் ஒட்டியிருந்த விரல்கள் பிரிக்கப்பட்டன.

இதுகுறித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி டி.எம்.பி. காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்.

இவருடைய மகள் செல்வ ஸ்ரீஜா (5). பிறந்தது முதல் சிறுமியின் வலது கையில் 3, 4-வது விரல்கள் ஒட்டி இருந்தன. இதனால் சிறுமியின் விரலில் அசைவு மற்றும் செயல்திறன் குறைவாக இருந்தது. மற்ற குழந்தைகள் போன்று சாப்பிட முடியாமலும், விளையாட, எழுத முடியாமலும் இருந்தார். மேலும், கை வலிக்கத் தொடங்கியுள்ளது.

சிறுமிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உரிய பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மூலம் விரல்களைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு மருத்துவர் ராஜ்குமார் தலைமையில், மருத்துவர்கள் அருணாதேவி, பிரபாகர், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

விரல்களைப் பிரிக்கும் போது, அதில் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டால், குழந்தையின் விரல்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நுணுக்கமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது. தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது, குழந்தையின் விரல்கள் நல்ல முறையில் இயங்குகின்றன. இதனால், குழந்தையும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுபோன்ற பிறவிக் குறைபாடுகள் 4 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. கைவிரல் ஒட்டி இருப்பது போன்று, உள் உறுப்புகளிலும் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். மருத்துவக் கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x