Published : 03 May 2024 05:21 AM
Last Updated : 03 May 2024 05:21 AM

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டம், வாய்ப்பு விளையாட்டு ஆகியவை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரைசிறைத் தண்டனையோ அல்லதுரூ.5 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள், கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பிடுகிறது.

அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர் அல்லது நிறுவனத்துக்கு, ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள், சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுறுத்தியுள்ளது. அத்தகைய தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம்போன்றவற்றை விளம்பரப்படுத்தும் பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோ ரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம், இணையதளசெயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இணையவழி சூதாட்டம்,பந்தய நடவடிக்கைகள் பற்றியதகவல்களைப் பகிர விரும்புவோர்அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கவிரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட செயல்பாடுகள், சேவைகள் மீதான விளம்பரங்களுக்கு தடை இருப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x