Published : 01 May 2024 05:59 AM
Last Updated : 01 May 2024 05:59 AM

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும்

கோப்புப்படம்

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மே 3-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

மே 3-ம் தேதி வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.அங்கு சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட், இதர மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 100-104 டிகிரி ஃபாரன்ஹீட், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 97-102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

மழைப்பொழிவு குறைவு: நடப்பு ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களை பொறுத்தவரை, வழக்கமான அளவைவிட 83% குறைவான அளவு மழை பெய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x