செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் வங்கி அசல் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த ஏப்.22-ல் வங்கியின் அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. இருதரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஏப்.30-ல் இம்மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வங்கி சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களில் இரு ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டவை என்பதால் அந்த அசல் ஆவணங்களையும் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-க்கு தள்ளி வைத்தார். இதேபோல் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் ஜூன் 4 வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in