Published : 01 May 2024 05:39 AM
Last Updated : 01 May 2024 05:39 AM

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரத்தில் கைதான 3 பேர் சிபிசிஐடி முன் ஆஜர்: நயினார் நாகேந்திரனையும் அழைக்க முடிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் நேர கண்காணிப்பின்போது நெல்லை ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக, பணத்துடன் பிடிபட்ட 3 பேர் நேற்றுசிபிசிஐடி போலீஸார் முன்னிலையில் ஆஜராகினர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, கடந்த 6-ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பணத்தை கொண்டு சென்றதாக பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான சென்னை கொளத்தூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேரைதாம்பரம் போலீஸார் கைது செய்தனர். இந்த பணத்தை நயினார்நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களில் 3 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பரிந்துரை: இதற்கிடையே தாம்பரம் ஆணையர் அமல்ராஜின் பரிந்துரையை ஏற்று இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்குமாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தொடர்புடைய ஆவணங்கள் சிபிசிஐடி பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன்பேரில் அப்பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் 2 தினங்களுக்கு முன்னர் விசாரணையை தொடங்கினார்.

சம்மன்: தாம்பரம் போலீஸார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸார் புதிதாக வழக்குப் பதிந்தனர். இதன் தொடர்சியாக, ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் நேரில் விசாரணை நடத்த அவர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று அவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இரவு 8.30 மணியைத் தாண்டியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x