Published : 30 Apr 2024 06:30 AM
Last Updated : 30 Apr 2024 06:30 AM

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு

சென்னை: பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மூத்த நிர்வாகிஎச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுகநிர்வாகிகள் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த பதிவை பதிவிட்டது யார் என எச்.ராஜா தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில் பதிவிடப்பட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதி, விசாரணையை முறைப்படி எதிர்கொள்ள அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x