Published : 29 Apr 2024 03:12 PM
Last Updated : 29 Apr 2024 03:12 PM

கோவையில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கத்துக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் செவ்வாய்க்கிழமை விசாரணை

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை நாளை (ஏப்.30) விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்த நிலையில் வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் நீக்கத்துக்கு முன்பாக முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.எனவே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமை (ஏப்.30) விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x