Last Updated : 27 Apr, 2024 09:41 PM

 

Published : 27 Apr 2024 09:41 PM
Last Updated : 27 Apr 2024 09:41 PM

கூலிங் பெயின்ட், நீர் மோர் - வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவை கோயிலில் சிறப்பு ஏற்பாடு

கோவை: கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல கூலிங் பெயின்ட் பூசப்பட்டுள்ளது. மேலும், நீர் மோரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களி்ல் மக்கள் சாலைகளில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதேபோல், நிலவும் வெப்பத்தால் கோயில் வளாகங்களில் திறந்தநிலை பிரகாரங்களை சுற்றி வரும் பக்தர்கள் நடக்க முடியாமல் சிரமப்படும் சூழல்களும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தின் சார்பில், அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, பக்தர்கள் வெயிலால் பாதிப்புக்குள்ளாகாமல் நடந்து செல்லும் வகையில் தரை விரிப்பு விரிக்க வேண்டும் அல்லது கூலிங் பெயின்ட் தரைகளில் பூசிவிட வேண்டும். பக்தர்களுக்கு வெயில் நேரங்களில் நீர் மோர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கோவையில் உள்ள கோயில்களில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, “பக்தர்கள் அதிகளவில் வரும் கோயில்களி்ல் பேரூர் பட்டீசுவரர் கோயில் முக்கியமானது. இங்குள்ள பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், முருகன், சிவ பெருமான், அனுமர் உள்ளிட்ட ஒவ்வொரு சுவாமிகளுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளன.

இப்பிரகாரங்களில் பக்தர்கள் நடக்கும் பாதை மேற்கூரையின்றி திறந்தவெளியாக இருக்கும். வெயில் நேரங்களில் பக்தர்கள் நடக்க முடியாம் சிரமப்படுவதைத் தடுக்க, கூலிங் பெயின்ட் கோயில் வளாகத்தில் நடைபாதை வடிவில் தரையில் பூசப்பட்டுள்ளது. அனைத்து பிரகாரங்களுக்கும் செல்லும் வகையில் பூசப்பட்டுள்ளது. இதன் மீது பக்தர்கள் நடந்து செல்லும் போது சூடு தெரியாது.

மிதியடி போட்டால் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும், பக்தர்கள் தடுக்கி விழுந்து விடுகின்றனர் என்பதால் மிதியடிக்கு பதி்ல் கூலிங் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், மருதமலை முருகன் கோயில் உள்ள மாவட்டத்தில் முக்கியமான, பெரிய பிரகாரங்களை கொண்ட ஆலயங்களில் மிதியடி அல்லது கூலிங் பெயின்ட் அடித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x