Published : 27 Apr 2024 06:09 AM
Last Updated : 27 Apr 2024 06:09 AM

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்க குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க அரசு ஏற்பாடு

வேலூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் காட்பாடி பகுதி சாலையோரங்களில் உடல் சூட்டை தணிக்கும் நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. படம்: வி.எம்.மணிநாதன்.

சென்னை: கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அரசு சார்பில் குடிநீர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே, உள்மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: பசிபிக் கடல் பகுதியில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிப்பது உள்ளிட்ட அப்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றத்தை எல்நினோ என்கிறோம். தற்போது பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ நிலவுகிறது. அவ்வாறு நிலவும்போது இந்திய பகுதியில் வெப்பம் அதிகமாக உள்ளது.

வரும் நாட்களில் வானில் மேகக்கூட்டங்கள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதனால் கோடை மழை பெய்யவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 30-ம்தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி, இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர நகராட்சிநிர்வாகத் துறை, பேரூராட்சிகள் இயக்ககம், ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை ஆகியதுறைகள் வாயிலாக தேவையான நடவடிக்கைள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் ஓஆர்எஸ் கரைசல் வழங்குவது, அதிகளவில் குடிநீர் கிடைக்கவழி செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள்: அரசு தவிர்த்து, அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆங்காங்கேதண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தண்ணீர் பந்தல்களை திறக்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக, பாஜக சார்பிலும் நேற்று தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் மோர், குளிர்பானங்கள், பழங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தடையின்றி வழங்கவும் தலைமைச்செயலர் தலைமையில் கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x