Published : 27 Apr 2024 06:23 AM
Last Updated : 27 Apr 2024 06:23 AM

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் - வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஏப்.6-ம்தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில் எஸ் 7 பெட்டியில் சென்னை கொளத்தூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் பயணம் செய்தனர்.

இவர்கள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. அப்போது அவர்கள் வைத்திருந்த 6 பைகளை பறக்கும்படையினர் சோதனையிட்டனர். அதில் முறையான ஆவணமின்றி சுமார் ரூ.4 கோடி ரொக்கம் (ரூ.3 கோடியே 98 லட்சத்து 91,500) இருந்தது தெரியவந்தது.

இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதன்தொடர்ச்சியாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல், சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி சென்னையைச் சேர்ந்த கோவர்த்தனன் உட்பட 8 பேருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணையில் ஆஜராவதற்கு 10 நாட்கள் அவகாசம் தரும்படி நயினார் நாகேந்திரன் கடந்த 22-ம் தேதி கோரினார்.

இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற டிஜிபி, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் மாநகர காவல்துறையிடமிருந்து ஓரிரு நாட்களில் சிபிசிஐடி போலீஸார் பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதன்பின் சிபிசிஐடி விசாரணையை தொடங்கும். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x