Published : 30 Apr 2018 07:54 AM
Last Updated : 30 Apr 2018 07:54 AM

தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 1,300 டாஸ்மாக் கடைகள் மூடல்; உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு நடவடிக்கை

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற் றம் செய்யாமல் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2016-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் சண்டிகர் வழியாகச் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நகராட்சி பகுதியில் மதுக்கடைகள் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சில விளக்கங்களை அளித்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கடந்த 2017 செப்டம்பர் 1-ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உடனடியாக மதுக்கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்தார். அதில், ‘தமிழக அரசின் சுற்றறிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். புதிதாக திறந்த கடைகளை மூட உத்தரவிட வேண்டும்’ என்று கோரி யிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து அதுதொடர்பாக முறையான அறிவிப்பு செய்யப்படாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந் தால் அந்தக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். அதுபோல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது’’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நேற்று நடைபெற்றது. இதன்படி சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 150 கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

ஊழியர்களுக்கு மாற்றுப்பணி?

கடைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் தனசேகரன் கூறும்போது, “தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்போது அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணித் தொடர்ச்சியுடன் அரசின் பிற துறைகளில் உள்ள காலி இடங்களில் பணி அமர்த்துவதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை. எஞ்சியுள்ள கடைகளில் கூடுதல் பணியாளர்களாக பணியமர்த்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மேலும், நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x