தனியார் தொழிற்சாலையை மூடக் கோரி திருமங்கலம் அருகே மறியல்: ஆர்.பி.உதயகுமார் கைது

தனியார் தொழிற்சாலையை மூடக் கோரி திருமங்கலம் அருகே மறியல்: ஆர்.பி.உதயகுமார் கைது
Updated on
1 min read

மதுரை: திருமங்கலம் அருகே தொற்று நோயை ஏற்படுத்தும் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராமம்அருகேயுள்ள கொக்கலாஞ்சேரியில், கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் இறைச்சிக் கழிவுகளை சுத்திகரித்து, உரமாக மாற்றும் பணி நடக்கிறது.

இதனால் ஆலையைச் சுற்றிஉள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காற்று மாசும் ஏற்படுவதாக 6 கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகாரின்பேரில், மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாஅறிக்கை கேட்டிருந்தார். அதற்குபதில் அளித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகத் தெரிவித்திருந்தது.

இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், மறியல் கைவிடப்படவில்லை. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர், பொதுமக்கள் என 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த தொழிற்சாலையைச் சுற்றி உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in