Published : 14 Apr 2018 08:24 AM
Last Updated : 14 Apr 2018 08:24 AM
திருவாரூர் அருகே கூடூரில் ஓஎன்ஜிசி நிறுவன குழாய் பதிப்பு பணிகளை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 40 ஆண்டுகளாக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ளது.
மேலும், புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கான ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அப் பணிகளின் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் இருந்து வெள்ளக்குடி கச்சா எண்ணெய் சேகரிப்பு மையத்துக்கு புதிதாக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக கூடூர் பிரதான சாலையில் போடப்பட்டுள்ள குழாய்களை டிராக்டர் மூலம், குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ள இடத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஓஎன்ஜிசி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக பதிப்பதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாய்களை தூக்கி எறிந்தும், குழாய்கள் மீதும் அமர்ந்தும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கிராம மக்களைப் பார்த்தவுடன் குழாய்களை எடுத்துச் சென்று பதிக்கும் பணிகளில் ஈடுபட இருந்த ஓஎன்ஜிசி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் போராட்டத்தை தொடருவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT