தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: கலைமகள் கல்வி நிறுவன தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்த வழக்கில், வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இதில், செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு சர்க்கரை நோய் மற்றும் இருதய பாதிப்பு இருக்கிறது. தொடர்ந்து சிறையில் இருந்தால் தனது உடல் நிலை மேலும் பாதிக்கப்படும். எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு டி.வி தமிழ் செல்வி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடியரசின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in