பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது: உயர் நீதிமன்றம்

பெண்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: கருணை அடிப்படையில் பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூரைச் சேர்ந்த அருணகிரி என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்த தனது தந்தை ராமலிங்கம் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தேன். அந்த மனு கடந்த 2015-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு பணி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.முரளி ஆஜரானார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திவிட்டதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in