

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி, தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் 240 சிறப்பு ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை கால விடுமுறையொட்டி, பொதுமக்கள் தற்போது அதிகளவில் வெளியூர், சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் பயணத்தில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதையடுத்து, பயணிகளின் நெரிசலை குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்கள் இயக்குவது, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவது போன்ற நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.
இதற்கிடையில், கோடை காலை விடுமுறையையொட்டி, தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் 240 சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் பயணிகள் அதிகளவில் சென்று வருகிறார்கள். பயணிகளின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, வேளங்கண்ணி, கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர், திருவனந்தபுரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து, எந்தெந்த வழித்தடத்தில் மக்களின் பயணத்துக்கு அதிக தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
இருப்பினும் அடுத்த மாதம் வரை 240 சிறப்பு ரயில் சேவைகள் இயக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். சுமார் 48 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக, கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.