Published : 05 Apr 2018 08:41 AM
Last Updated : 05 Apr 2018 08:41 AM

திருச்சி விமான நிலைய முற்றுகை போராட்டம்: தினகரன் உள்ளிட்ட 1,654 பேர் மீது வழக்கு

திருச்சி விமான நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தியது தொடர்பாக டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட 1,654 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நேற்று முன்தினம் விமான நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இப் போராட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விமான நிலையத்தை முற்றுகையிட்டவர்களை போலீஸார் கைது செய்து, பேருந்துகள், வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது தினகரன் ஆதரவாளர்கள் போலீஸ் வேன் ஒன்றில், முன்பகுதி கண்ணாடியை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையைப் பிடித்து தொங்கிக்கொண்டு சென்றனர். இதனால் வேனின் கண்ணாடி உடைந்தது.

இதுதொடர்பாக, வேன் ஓட்டுநரான ஆயுதப்படை காவலர் மதிச்செல்வன்(52) ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, செம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயலெட்சுமி அளித்த புகாரின்பேரில் தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உட்பட 1,654 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அரசு அலுவலகத்தை முற்றுகையிடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x