Published : 28 Apr 2018 09:22 AM
Last Updated : 28 Apr 2018 09:22 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் நாளை போராட்டம்: தி.வேல்முருகன் திட்டவட்ட அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நாளை (ஏப்.29) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே வரும் 29-ம் தேதி அமைதியான முறையில் போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினோம்.

ஆனால், அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறும் தேதிக்கு முன்னர் அனுமதி கிடைக்காவிட்டாலும், திட்டமிட்டபடி 29-ம் தேதி போராட்டம் நடைபெறும். போராட்டத்தில் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், சூழலியல் இயக்கங்கள் என 50-க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அரசியல் கட்சிகளின் சாயம் இன்றி கட்சி கொடிகள் இல்லாமல் இந்த போராட்டம் நடைபெறும். நீருக்காகவும், சோறுக்காகவும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x