Published : 20 Apr 2024 04:17 AM
Last Updated : 20 Apr 2024 04:17 AM

பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் மதுராந்தகம், காஞ்சி, திருவள்ளூர் பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு

பரந்தூர் ஏகனாபுரம் வாக்குச்சாவடியில் மொத்தம் 21 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்கு இயந்திரங்களை மத்திய பாதுகாப்பு படையினர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

மதுராந்தகம்/காஞ்சி/திருவள்ளூர்: மதுராந்தகம், காஞ்சி, திருவள்ளூர் பகுதிகளில் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 5,100ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் பகுதியில் சுமார் 1,500 ஏக்கர்இடங்களும், நாகப்பட்டு பகுதியில் 250 ஏக்கர் இடங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் ஏகனாபுரத்தை மையமாக வைத்து 630 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களின் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்காத நிலையில் ஏகனாபுரம். நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆனாலும் 21 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த 21 வாக்குகளும் அரசு ஊழியர் வாக்குகள் என்றும், அவர்களை வாக்களிக்கும்படி அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து இந்தப் பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது இதன் பின்னராவது பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து சென்னை விமான நிலைய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றனர். இந்தத் திட்டத்தை உடன நிறுத்த வேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் எந்த எல்லைக்கும் செல்லும் என தெரிவித்தனர். ஏகனாபுரத்தில் 1,300 வாக்குகளில் 21 வாக்குகளும், நாகப்பட்டு பகுதியில் உள்ள245 வாக்குகளில் 41 வாக்குகளும் பதிவாகின.

கல்குவாரி: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. கல்குவாரிகளில் வெடிக்கும் வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இரவு பகல்பாராமல் லாரிகளில் கனரக வாகனங்கள் கற்களை ஏற்றி செல்கின்றன. இதனால் இந்த கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்த கல்குவாரியை மூடக்கோரி பலமுறை மனு அளித்தனர். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மக்களவை தேர்தலை புறக்கணித்து கிராம நுழைவாயிலில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி வாக்கு அளிக்க மாட்டோம், கல்குவாரியை மூட வேண்டும் என கோஷமிட்டு தேர்தலை புறக்கணித்தனர். பின்னர், மதுராந்தகம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் வாக்களித்தனர். இதேபோல், கீழ்வாசலை கிராமத்தில் பட்டா வழங்காததை கண்டித்தும், விளங்கனூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டாக் கோரியும் அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், கிராம மக்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மக்களில் சிலரே வாக்கு அளித்தனர்.

காட்டுப்பள்ளி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி கிராமத்தில் மூன்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த காட்டுப்பள்ளிகுப்பம் கிராமமக்கள், 2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 நபர்களை மீண்டும் பணிக்குஎடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தனர்.

அதே போல், பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட விடத்தண்டலம் கிராம மக்கள், சாலை சீரமைக்கப்படவில்லை என்று கூறியும், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியை சேர்ந்த பகுதிகள் வருவாய்த் துறை ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் நேற்று தேர்தலை புறக்கணித்தனர். இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டை அடுத்த குமாரராஜபேட்டை கிராம மக்கள், சித்தூர்- தச்சூர் 6 வழி சாலை திட்டத்துக்காக தங்கள் பகுதியில் உள்ளஇரு அம்மன் கோயில்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வாக்கு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x