Last Updated : 19 Apr, 2024 06:57 PM

 

Published : 19 Apr 2024 06:57 PM
Last Updated : 19 Apr 2024 06:57 PM

முதல் முறை வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ரூ.50,000 செலவழித்து புதுச்சேரி வந்த மாணவி!

தாயுடன் புவியரசி

புதுச்சேரி: முதல் முறையாக வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து ரூ.50 ஆயிரம் செலவழித்து இளம் வாக்காளர் ஒருவர் தன் தாயுடன் புதுச்சேரி வந்துள்ளார். கிருமாம்பாக்கத்துக்கு தன் தாயுடன் வந்த அவர் வாக்களித்துச் சென்றார்.

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாலதி. மகள் புவியரசி (18). தொழிலதிபரான ஆறுமுகம் பல ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆனால், அவரது மனைவி மாலதி மற்றும் கல்லூரி மாணவியான மகள் புவியரசி இருவரும் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் வாக்காளர்களாக உள்ளனர். இது அவர்களின் பூர்வீக ஊர்.

அதில் புவியரசி முதன்முறையாக தற்போதுதான் வாக்களிக்கிறார். சிங்கப்பூரில் குடியிருந்து வரும் மாலதி, புவியரசி ஆகியோர் வாக்களிப்பதற்காகவே அங்கிருந்து புதுச்சேரி கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அவர்கள் இன்று கிருமாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடியில்
வாக்களித்தனர்.

இதுபற்றி புவியரசி கூறுகையில், “நான் சிங்கப்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறேன். தேர்தலில் வாக்களிக்க விருப்பம். அப்பா பிறந்த ஊரில் தேர்தலில் வாக்களிக்க காத்திருந்தேன். முதல்முறையாக இம்முறை வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்து விமானம் மூலம் சென்னை வந்து காரில் புதுச்சேரி வந்தோம்.

இங்கு வந்து பார்த்தபோது என் தந்தை படித்த பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடியில் எனது வாக்கு இருந்தது. அங்கே வாக்களித்தது, அப்பா படித்த பள்ளியை பார்த்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாளை மீண்டும் சிங்கப்பூர் செல்கிறோம். விமானத்தில் வந்து அப்பா படித்த பள்ளியில் முதல் வாக்கை செலுத்தியது வாழ்வில் மறக்க முடியாதது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x