

கேத்தகிரி: கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி ஆய்வாளர் ஜெய முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கோத்தகிரி ஒன்றிய திமுக செயலாளர் நெல்லை கண்ணன் என்பவரது காரை தனிப்படை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.8 லட்சத்து 500 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், நான் வங்கியிலிருந்து ரூ.10 லட்சம் எடுத்து வந்ததாகவும், அதற்கான ஆவணம் இருப்பதாகவும் நெல்லை கண்ணன் போலீஸாரிடம் கூறினார்.
தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரூ.10 லட்சத்துக்கான ஆவணம் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்டதோ ரூ.8 லட்சம். மீதமுள்ள தொகை என்னவானது என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை. எனவேதான் பணம் பறிமுதல் செய்யப்பட்டது’’ என்றனர். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.