Published : 17 Apr 2024 05:06 PM
Last Updated : 17 Apr 2024 05:06 PM

‘உச்ச நீதிமன்றத்தையே திமுக நாட வேண்டும்’ - விளம்பர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம் @ ஐகோர்ட்

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு நகலை வியாழக்கிழமை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும் என்ற விதி உள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி, இந்தியாவை காக்க “ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற தலைப்பில், திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. திமுகவின் இந்த தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கிறது.

திமுக விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை கால தாமதம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து, விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்த எந்த விதிகளும் இல்லை. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நீடிக்கிறது எனக் கூற முடியாது. அதன்பின் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மேல் முறையீடு செய்வதற்கு எந்த வழிவகையும் செய்யவில்லை” என வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “கேபிள் டிவி ஒழுங்குமுறை விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என உத்தரவிட்டுள்ளது.

வேறு எந்த நீதிமன்றமும், தீர்ப்பாயமும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த உத்தரவு நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அந்த உத்தரவு 2004-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது” என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு நகல் எங்கே?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு நகல் இல்லை. உச்ச நீதிமன்ற இணைய தளத்திலும் இல்லை” என தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகலை நாளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்.17) தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x