

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மானாமதுரை சென்ற அவர், காந்தி சிலை அருகேயுள்ள காங்கிரஸ் அலுவலத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வார்டு வார்டாகச் சென்று வாக்குச் சேகரிக்க புறப்பட்டார். அங்கு வந்த வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாக்கு சேகரிக்க அனுமதி பெற்ற விவரத்தைக் கேட்டனர்.
அப்போது திமுக, காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க அனுமதி பெறத் தேவையில்லை என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஸ்ரீநிதி தனது காரில் ஏறி அமர்ந்தார். பின்னர் கட்சியினர் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி பிரச்சாரம் செய்வதற்கு பெற்ற அனுமதியை காட்டினர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அதிகளவில் கூட்டம் கூட்டி வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் வார்டுகளில் பிரச்சாரம் செய்தனர். மேலும் இதை வீடியோ எடுத்த செய்தியாளரையும் கட்சியினர் மிரட்டி தாக்க முற்பட்டனர்.
ஸ்ரீநிதி மீது வழக்கு: இதையடுத்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தது தொடர்பாக ஸ்ரீநிதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, மகளிர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீவித்யா, திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் 60 பேர் மீது மானாமதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.