Published : 16 Apr 2024 05:38 AM
Last Updated : 16 Apr 2024 05:38 AM

அமலாக்கத் துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் குறிப்பிட்ட தேதியில் தீர்ப்பளிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்தவழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜிதரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதானவிசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்றுநடந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பிடம், வங்கியில் இருந்து பெறப்பட்ட சலான் உள்ளிட்ட அசல் ஆவணங்கள் வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மா.கவுதமன், இந்த அசல் ஆவணங்களில் சில வேறுபாடுகள் உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வங்கி ஆவணங்கள் தொடர்பாக மனுதாரர்தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையது இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனு மீது நாளை (ஏப்.17) உத்தரவுபிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்.17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x