Published : 15 Apr 2024 05:24 PM
Last Updated : 15 Apr 2024 05:24 PM

“ஜூன் 4-க்குப் பிறகு உதயசூரியன் மறைந்துபோகும்” - மோடி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு

நெல்லையில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

திருநெல்வேலி: “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் உதயசூரியன் மறைந்து போகும்” என்று நெல்லையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

அப்போது: “உலகெங்கும் வாழும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மூன்று முறை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அதேபோல், மூன்றாவது முறை இந்தியாவின் பிரதமராக தொடர வேண்டும்.

பிரதமர் இன்று நெல்லைக்கு வருகை தரும் காரணத்தால், நெல்லையில் உதயசூரியன் அஸ்தமித்துள்ளது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. உதயசூரியன் மறைந்துவிட்டான். ஜூன் 4-க்கு மேல் 400-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமர் மோடியின் காலடியில் இருப்பர். இந்த மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, உதயசூரியன் எப்படி இன்றைக்கு மறைந்ததோ, அதேபோல் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மறைந்து போகும்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x