Published : 26 Apr 2018 01:11 PM
Last Updated : 26 Apr 2018 01:11 PM

பதவிக்காக டிடிவி தினகரன் சசிகலாவிடம் பிச்சை எடுத்தார்: திவாகரன் பேட்டி

பதவிக்காக டிடிவி தினகரன் சசிகலாவிடம் பிச்சை எடுத்ததாக திவாகரன் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், காயப்படுத்தும் விதத்திலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் திவாகரனின் மகன் ஜெயானந்த் ஆகியோர் செயல்படுவதாக, டிடிவி தரப்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் கடந்த 23-ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து, ஜெயானந்த் வெளியிட்ட அறிக்கையில், வெற்றிவேலின் பதிவு அவருடைய கருத்து அல்ல எனவும், வேறொருவருடைய கருத்தை அவர் பதிவிட்டதாகவும் டிடிவி தினகரனை மறைமுகமாக சாடினார்.

இதையடுத்து, டிடிவி தினகரன் - திவாகரன் இடையே மோதல் வெளிப்படையாகவே வெடித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திவாகரன், ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டணியில் இணைய பாஜகவுடன் தான் பேசியிருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்தார்.

அப்போது, “டிடிவி தினகரன் தரப்பினர் எல்லா குற்றச்சாட்டுகளையும் சொல்வார்கள். ஒருவருடைய மதிப்புக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். ஓ.பன்னீர்செல்வம் மீது இப்படித்தான் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். அதன்பிறகு, ஓபிஎஸ் வெளியே வந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அடுத்து எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். அவரிடம் இவர்களது எண்ணம் பலிக்கவில்லை. இப்போது என் மீது பழி சுமத்துகின்றனர். என்னிடமும் அவர்களது எண்ணம் பலிக்காது.

யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதை காலம் நிரூபிக்கும். டிடிவி தினகரனின் முதல்வர் ஆசையினால் தான் அதிமுகவுக்கு இவ்வளவு கேடு. டிடிவி தினகரன் இல்லாதிருந்தால் அதிமுகவுக்கு இவ்வளவு பிரச்சினையே வந்திருக்காது.

சசிகலா சிறை செல்லும் போது டிடிவி தினகரன் முதல்வர் பதவி கேட்டார். ஆனால், சசிகலா கொடுக்கவில்லை. அதன்பின், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவிக்கு பிச்சை எடுத்தார் டிடிவி தினகரன். சசிகலாவும் பிச்சை போட்டார். டிடிவியால் சசிகலாவும் கெட்டுப் போய்விட்டார். 123 எம்எல்ஏக்கள், 28 எம்.பி.க்கள் என அனைத்தும் சேர்ந்து கட்சியை டிடிவி தினகரனிடம் கொடுத்தார். இப்போது அவர் என்ன பாக்கி வைத்திருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சி ஆரம்பித்து போலி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் தினகரன்” என திவாகரன் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x