Published : 07 Apr 2018 12:48 PM
Last Updated : 07 Apr 2018 12:48 PM
சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
“மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறித்தது தமிழக மாணவர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மற்றும் கிராமபுற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது நீட் தேர்வால் எட்டாகனியாகவே ஆகிவிட்டது. இந்த நிலையில் எஞ்சியிருக்கின்ற சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு மத்திய அரசால் இனி கனவாகவே ஆகிவிடும் போல் உள்ளது.
ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சித்த மருத்துவம் செழித்தோங்கவும், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வியை தடையின்றி பெற நீட் தேர்வை தமிழகத்தில் நீக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT