Published : 03 Apr 2018 11:22 AM
Last Updated : 03 Apr 2018 11:22 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சார்பில் மாநில செயலாளர் புருசோத்தமன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் இவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிமுக சார்பில், மார்ச் 3-ம் தேதி (இன்று) வருவாய் மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (செவ்வாய்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே மாநில செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர் , வையாபுரி மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT