

ஆண்டிபட்டி: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் ஆண்டிபட்டியில் பாட்டுப்பாடி பிரச்சாரம் செய்தார்.
தேனி பேருந்து நிலையம், வைகை அணை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது, தேனி தொகுதியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஏற்கெனவே 2 முறை வாக்களித்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த முறையும் வாக்களித்து ஏமாந்து விடாதீர்கள்.
இன்னும் சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து வலம் வரு கின்றனர். என்னைப் பொருத்தவரை கட்சி தாவுதல் என்பது பிடிக்காத விஷயம். அதிமுகவுடன் நான் சந்திக்கும் நான்காவது தேர்தல் இது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட நான் அதிமுகவுடன் ஐக்கியமாகி விட்டேன் என்றே கூற வேண்டும். ஆரம்பத்தில் யார் நல்லவர்கள் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டு தற்போது அதிமுகவிலேயே என்னை தக்க வைத்துக் கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமரன் படத்தில் அவர் சொந்தக் குரலில் பாடிய ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்ற பாடலை பாடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.