Published : 12 Apr 2024 05:47 AM
Last Updated : 12 Apr 2024 05:47 AM

நெல்லை, கோவையில் ராகுல் இன்று பிரச்சாரம்: இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

சென்னை/திருவெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, கோவையில் இன்று இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட இந்திய ஒற்றுமைப் பயணம், மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6,500 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட ஒற்றுமை நீதிப் பயணம் ஆகியவற்றை ராகுல் காந்தி மேற்கொண்டார். இதற்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைத்தது.

மு.க.ஸ்டாலினுடன் இணைந்து... இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் இன்று (ஏப். 12) மாலை 3 மணிக்கு திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார், தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்.

பாஜக ஆட்சி அமைத்தது முதல் சமூக நீதியில் அக்கறையின்றியும், இடஒதுக்கீட்டு முறைக்கு மாற்றாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சமூக நீதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

2017-ல் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரம் இடங்கள் பறிபோனதுடன், அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.

2024 தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

எனவே, திருநெல்வேலி, கோவையில் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள் ஆய்வு: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, "பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு மாலை 4 மணிக்கு ராகுல்காந்தி வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பின்னர் காரில் மேடைக்கு செல்லும்போது `ரோடு ஷோ; நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடல் போன்றது. சிறுசிறு அலைகள்போல, கட்சியில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை யெல்லாம் பேசித் தீர்த்து விட்டோம்" என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15-ம் தேதி தமிழகம் வருகிறார். புதுச்சேரியில் காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வி.வைத்திலிங்கத்தை ஆதரித்துப் பேசும் அவர், மாலையில் கடலூரில் நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆத ரித்து பேசுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x