Published : 09 Apr 2024 05:17 AM
Last Updated : 09 Apr 2024 05:17 AM

யுகாதி பண்டிகை இன்று கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா மற்றும் கன்னடம் பேசும் கர்நாடக மக்களால் யுகாதி பண்டிகை இன்று (ஏப்.9) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்திலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னடமொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள். வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப் பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ்ந்திட காங்கிரஸ் சார்பில் யுகாதி நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: யுகாதி பண்டிகையின்போது, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் சிறக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிபேசும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, சு.திருநாவுக்கரசர் எம்.பி., கோகுல மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் எம்.வி.சேகர், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x