Published : 25 Apr 2018 03:11 PM
Last Updated : 25 Apr 2018 03:11 PM
மது போதை காரணமாக மனைவியிடம் அடிக்கடி சண்டைபோட்டு வந்த கணவர், நேற்றிரவு மனைவி தூங்கும்போது தலையில் அம்மிக்கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்தார்.
சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (50). இவரது மனைவி முபாரக் பேகம் (44), அப்துல் ஜபார் மதுப்பழக்கம் உடையவர். மதுப்பழக்கம் அதிகம் ஆனதால் அவர் சரிவர வேலைக்குச் செல்வதில்லை.
அப்துல் ஜாபர் தினமும் குடித்துவிட்டு, குடும்ப செலவுக்குப் பணம் கொடுக்காமல் மனைவி முபாராக்கிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை காரணமாக ஜாபர் மனைவி முபாரக்கைத் தாக்குவதுண்டு.
இதை அக்கம் பக்கத்தார், உறவினர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்துள்ளார் ஜாபர். மது போதையில் வீட்டுக்குள் வந்தவர் மனைவியிடம் தகாராறு செய்துள்ளார். இருவரும் வாக்குவாத்ததில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மனைவி முபாரக் பேகம் தூங்கிவிட்டார்.
மது போதையில் இருந்த முபாரக் தூங்கவில்லை. ஆத்திரத்துடன் திட்டியபடி அங்கும் இங்கும் உலாவியவர் தூங்கும் மனைவியைப் பார்த்து கோபத்துடன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார், இதனால் தலையிலும், மார்பிலும் பலத்த காயம் அடைந்த முபாரக் பேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்து விட்டு ஜாபர் தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தவர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி நகர் போலீஸார் முபாரக் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த அப்துல் ஜாபரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
மது போதையில் கணவரே மனைவி மீது அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT