

சென்னை: பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஸ்டாலினின் பேச்சுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மயங்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்குபல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். 3 ஆண்டுகள் ஆன நிலையில்அரசு ஊழியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவர், செவிலியர், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் என பலரை பணியிட மாற்றம் செய்தும், போராடியவர்களை கைது செய்தும் தனது கோர முகத்தை திமுக அரசு காட்டியது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறியதோடு, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்வையும் பலமுறை 6 மாதகால தாமதமாக அறிவித்து, பணப்பயன் இல்லாமல் திமுக அரசு வழங்கியது.
இந்நிலையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் நிதிநிலை சீராகும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஸ்டாலினின் தொடர் நாடகத்துக்கு அறிவார்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மயங்க மாட்டார்கள். தக்க பாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள்.
அதிமுக ஆட்சியில், இந்திய அளவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக புதிய சம்பள உயர்வை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு, பணப்பயனுடன் வழங்கியது.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றும். மக்களவைத் தேர்தலில் தமிழக உரிமைகளை காக்க அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.