Published : 21 Apr 2018 03:56 PM
Last Updated : 21 Apr 2018 03:56 PM

காவிரி விவகாரம்; 23-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம்: ஜவாஹிருல்லா அழைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தை பொதுமக்கள் வெற்றியடைய செய்ய வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா இண்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை மறுக்கும் மத்திய அரசையும், உரிமைகளை மீட்டெடுக்க உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசையும் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் சார்பாக மனித சங்கிலிப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம், மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம், காவிரி உரிமை மீட்புப் பயணங்கள், பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் 100 விழுக்காடு வெற்றியடைந்தாலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மாநில அரசு அதை வேடிக்கைப் பார்த்து வருகிறது.

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 23 அன்று தமிழகத்தின் உரிமைக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர், தோழமைக் கட்சியினர், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் தங்களின் முழுமையான ஆதரவை அளித்து இந்த மனித சங்கிலிப் போராட்டத்தையும் மாபெரும் வெற்றிப் போராட்டமாக்கிட வேண்டும்” என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x