Published : 05 Apr 2024 05:25 AM
Last Updated : 05 Apr 2024 05:25 AM

சிறை பிடிக்கப்பட்ட 24 தமிழக மீனவர் விடுதலை: படகு ஓட்டுநருக்கு சிறை தண்டனை விதிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 20-ம் தேதி கடலுக்குச் சென்ற அந்தோணி ஆரோன், ராஜ், அருளானந்தம் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 3 படகுகளில்இருந்த அந்தோணி ஆரோன், சேசுராஜ், திருபால், ராஜ், பரலோகராஜ், ஜஸ்டின், ராஜ்குமார், பாலமுருகன், முனீஸ்வரன், மதன்குமார், ஹரி கிருஷ்ணன், கோவிந்தன், அல்லா பிச்சை, மாரி கருப்பையா, ஜெகன், அந்தோணி காட்சன், ராஜசேகர், ராஜா முகமது, ரஞ்சித், ராமு, அந்தோணி காயின், மோகன், மனோகரன், சேகரன், முருகன்ஆகிய 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், 2 படகுகளின் உரிமையாளர்களான அந்தோணி ஆரோன் மற்றும் ராஜ்ஆகிய இருவரும் படகின் ஓட்டுநர்களாகவும் சென்று சிறை பிடிக்கப்பட்டதால், இருவரது படகுகளை நாட்டுடைமையாக்கியும், மற்றொரு படகின் ஓட்டுநரான ஜெகன் (46) என்பவருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும், 24 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்தால்,சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஒரு படகின் உரிமையாளரான அருளானந்தம் ஜூன் 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x