இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, காரைக்கால் மீன்பிடித்  துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
Updated on
1 min read

காரைக்கால்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கைகடற்படையினர் அடிக்கடி கைதுசெய்கின்றனர். மேலும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் விடுதலைசெய்யப்படுகின்றனர். ஆனால், படகுகளை ஓட்டிச் செல்லும் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், படகுகளையும் இலங்கை அரசு விடுவிப்பதில்லை.

தற்போது 6 மாத சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களையும், 4 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், 2 நாட்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால், தங்களின் விசைப்படகுகளில் கருப்புக் கொடியை ஏற்றவும் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in