Published : 02 Apr 2024 05:40 AM
Last Updated : 02 Apr 2024 05:40 AM

சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச்சில் 86.82 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 86 லட்சத்து 82ஆயிரத்து 457 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.60 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயணவசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளிக்கிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

அந்த வகையில், நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 86 லட்சத்து 82ஆயிரத்து 457 பேர் பயணம் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தை விட மார்ச்சில் 67 ஆயிரத்து 449 பேர் அதிகம் பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக மார்ச் 4-ம் தேதி 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34 லட்சத்து 62 ஆயிரத்து 83 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 64 ஆயிரத்து 44 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 54, 849 பேரும்,குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,512 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13 லட்சத்து 95 ஆயிரத்து 969 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x