

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு, மீனவ கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஏராளமான கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழிலை மட்டும் நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர். வழக்கமாக இம்மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழையால் கடல் சீற்றம் இருக்கும்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று மாலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவ மக்கள்வெளியேறினர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகேயுள்ள இரயுமன்துறை கடற்கரை கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. மேலும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் கடலரிப்பால் துண்டிக்கப்பட் டது. பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டம் நடத்திய மக்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.