Published : 18 Feb 2018 11:35 AM
Last Updated : 18 Feb 2018 11:35 AM

ராணிப்பேட்டை தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமிய கழிவை அகற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் மூடப்பட்ட தொழிற்சாலையில் தேங்கியுள்ள 2.15 லட்சம் டன் குரோமியக் கழிவை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை சிப்காட்டில் கடந்த 1975-ம் ஆண்டு தமிழ்நாடு குரோமியத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. தொழிற்சாலையிலிருந்து உயிருக்கு ஆபத்தான நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், கடந்த 1989-ம் ஆண்டு குரோமியத் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால், தொழிற்சாலையில் தேங்கியுள்ள 2.15 லட்சம் டன் குரோமியக் கழிவு அகற்றப்படாமல் உள்ளது.

இதனை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். தீங்கு விளைவிக்கும் குரோமியக் கழிவை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில தலைவர் பரசுராம் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமராணி, நிர்வாகிகள் கோபி, தர்மராஜ், யுவனேஷ், தீபக் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்றவர்கள் குரோமியக் கழிவை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x