Published : 06 Feb 2018 09:42 PM
Last Updated : 06 Feb 2018 09:42 PM
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யக்கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 43.63 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுப்பணித்துறை ஜனவரி 18-ந் தேதி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 7-ந் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்டத்தின் விதி 20-ன்படி, 2 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற விதியை மீறி, ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்யவேண்டும் என அம்பத்தூர் ஒப்பந்தகாரர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஒப்பந்த புள்ளி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், நினைவிடம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT